பாலக்காடு மாவட்டத்தில் நெல் அறுவடை சீசன் துவங்கியது-தமிழக அறுவடை இயந்திரங்களுக்கு மவுசு அதிகரிப்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் வயக்காடுகளில் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ளதால் தமிழகத்திலுள்ள அறுவடை இயந்திரங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

நெற்களஞ்சியமான பாலக்காடு மாவட்டத்தில் முதற்பட்ட அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்கள் போல் அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால்  கேரள விவசாயிகள் தமிழகம் பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு  அறுவடை செய்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்திற்கு தலா ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரையிலாக அறுவடை இயந்திரத்திற்கு வாடகைச் செலுத்தப்படுகிறது. இதேபோன்று நெல் நாற்றுகள் நடவு செய்வதற்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே  அரசுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் அறுவடை இயந்திரங்கள் உள்ளது. இவற்றில் சில பழுதடைந்து பயனில்லாமல் கிடப்பில் உள்ளன. இதனால், தமிழகத்திலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் அறுவடை இயந்திரங்கள் லாரிகள் மூலமாக வரவழைக்கப்பட்டு அறுவடை செய்த வண்ணம் உள்ளனர்.

முதற்பட்ட நெல்பயிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால் இவற்றை எப்படியாவது மழைப்பாதிப்புகளிலிருந்து மீட்டு அறுவடை செய்யவேண்டும் என்ற இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாலை காலமான ஐப்பசி மாதத்தில் திடீரென மழை  பெய்து விடுவதால் முதிர்ந்து நெல்பயிர்கள் அடியோடு சாய்ந்து  பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிர்கள் பெரும் இழப்பை சந்திக்கவேண்டியுள்ளது. கேரளாவில் நெற்களஞ்சியங்களாக விளங்கும் பாலக்காடு, ஆலப்புழா ஆகிய 2 மாவட்டங்களில் தற்போது நெல்பயிர் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வயக்காடுகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்தானியங்கள் உலரவைத்து, பதப்படுத்தி ஆலைகளுக்கு கொள்முதல் செய்தவண்ணம் உள்ளனர். மேலும், பாலக்காடு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்மூட்டைகள் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா, பெரும்பாவூர், ஆலப்புழா ஆகிய இடங்களிலுள்ள அரிசி ஆலைகளுக்கும் அனுப்பி பணம் பட்டுவாடா விவசாயினர் செய்து வருகின்றனர்.

Related Stories: