கும்பாபிஷேகத்துடன் தேவர் குருபூஜை விழா இன்று துவங்கியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி,  அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் தற்போது கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.

கருடன் வந்து வட்டமிட்டதும் கோயில் கோபுரம் கலசம் மற்றும் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், அதிமுக எம்பி தர்மர், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று வழக்கமான ஆன்மீக விழா துவங்கியது. நாளை அரசியல் விழாவும், நாளை மறுநாள் குருபூஜையும் நடக்கிறது.

‘‘எடப்பாடி வாழ்க - ஒழிக கோஷம்’’

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தங்க கவசம் பொருத்திய தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது உடன் வந்திருந்த ஆதரவாளர்கள் எடப்பாடி வாழ்க என கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி ஒழிக, உதயகுமாரே வெளியேறு என  கோஷமிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.

Related Stories: