மனித உரிமை ஆர்வலர்கள் மாயமான வழக்கு: கோத்தபய நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கொழும்பு: மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக வேண்டும் என இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு கடந்த 2018ம் ஆண்டு யாழ்ப்பாணம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி அப்போது கோர்ட்டில் ஆஜராகாமல் அவர் தப்பினார். அதன்பின், நாட்டின் அதிபர் ஆனதால் அரசியல் சாசன விலக்கு பெற்றவர் என்ற முறையில் இந்த சம்மன் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக கோத்தபய ராஜபக்சேவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகியதால் அவருடைய அரசியல் சாசன விலக்கு ரத்தானது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: