சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஏராளமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி சிங்கப்பூரில் புதிய இந்து கோயில் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் கலாச்சார, சமூகம், இளைஞர்துறை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் வௌியிட்ட அறிக்கையில், “அதிகரித்து வரும் இந்து மக்களின் வழிபாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய ஆலயம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக யிஷூன் அவென்யூவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் அமைய உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடப்பாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் கேரள கட்டட கலை பாணியில் வடிவமைக்கப்படும். இந்த கோயிலில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று, ஸ்ரீ குருவாயூரப்பன், ஐயப்பன், விநாயகர், பகவதி ஆகியோர் கொண்ட வழிபாட்டு பகுதி.
மற்றொன்று, 5-6 மாடிகளை கொண்ட கட்டடம். இதில் திருமண மண்டபம், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் இடம்பெறும். இந்த கோயில் குறிப்பாக, கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலுக்கு செல்லும் சிங்கப்பூர் யாத்ரீகர்களுக்கு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
