பண மோசடி வழக்கில் டிஆர்எஸ் எம்பி சொத்து முடக்கம்

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த எம்பி நாம நாகேஷ்வரராவ் மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான ரூ.80 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. தெலங்கானாவில் ராஞ்சி எக்ஸ்பிரஸ்வே லிமிடெட், மதுகோன் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு நடைபெற்று வருகின்றது. ராஞ்சி எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாங்கிய வங்கி கடனில் இருந்து ரூ.361.29 கோடி வேறு கணக்கிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் (பாரத ராஷ்ட்ரிய சமிதி) மக்களவை எம்பி நாம நாகேஷ்வரராவ் மதுகோன் குழும நிறுவனங்களின் விளம்பரதாரர் மற்றும் இயக்குநராகவும், ராஞ்சி எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனத்தின் வங்கி கடனுக்கு தனிப்பட்ட உத்தரவாதம் அளித்தவராகவும் உள்ளார். இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் நாம நாகேஷ்வரராவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.80.65 கோடி மதிப்பிலான 28 அசையா சொத்துக்கள் உட்பட பிற சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று அறிவித்துள்ளது.

Related Stories: