திருப்பூர்: திருப்பூரில் காதல் விவகாரத்தில் மாயமான 9ம் வகுப்பு மாணவியின் உடல் அழுகிய நிலையில் கல்லுக்குழியில் இருந்து மீட்கப்பட்டது. மர்ம நபர்கள் கொன்று வீசினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். திருப்பூரை சேர்ந்த தம்பதியின் மகள் காயத்திரி (14). திருப்பூரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12ம் தேதி காயத்திரி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் வடக்கு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து காயத்திரியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அம்மாபாளையம், கானாக்காடு பகுதியில் ஒரு கல்லுக்குழியில் பள்ளி சீருடையுடன் மாணவி இறந்து கிடப்பது தெரிய வந்தது. போலீசார் சென்று அழகிய நிலையில் கிடந்த மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாணவி காயத்திரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்தபோது சம்பவத்தன்று இந்த மாணவியுடன் மேலும் ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்கள் அப்பகுதிக்கு வந்தது தெரிய வந்தது. அந்த மாணவி மற்றும் 2 மாணவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாணவியின் தந்தை ரமேஷ்குமார் கூறியதாவது: எனது மகளும், அவிநாசியை சேர்ந்த ஒரு மாணவனும் காதலிப்பதாக கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் எங்களுக்கு தெரியவந்தது. இந்த பிரச்னையை போலீஸ் நிலையத்தில் பேசி சுமுகமாக முடித்துக்கொண்டோம். பின்னர், காலாண்டு தேர்வு விடுமுறையில் மீண்டும் அந்த மாணவரின் வீட்டிற்கு எனது மகள் சென்றுவிட்டார். மீண்டும் போலீஸ் மூலம் பிரச்னையை பேசி தீர்த்தோம். அதன்பின், எனது மகளை அவிநாசி பள்ளியில் இருந்து திருப்பூர் பள்ளியில் சேர்த்துவிட்டோம். அவர் ராயபுரத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் தான், கடந்த 12ம் தேதி மாயமானார். அதன்பின், பாறைக்குழியில் தான் சடலமாக பார்த்தோம். எனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.