சில்ஹெட்: ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியின் 8வது தொடர், வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் என 7 நாடுகள் பங்கேற்றன. லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியா, அரையிறுதியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பை பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி 5வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.