வரும் 25, நவ.8ம்தேதி சூரிய, சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.! தேவஸ்தானம் தகவல்

திருமலை: வரும் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் அன்றைய நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்தாண்டிற்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அதன்படி வரும் 25ம்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால், அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல், நவம்பர் 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினமும் கோயில் கதவுகள் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். பிறகு கட்டணமில்லா தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும். எனவே விஐபி தரிசனம், வாணி, ₹300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்டணமில்லா தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பொதுவாக கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. எனவே, திருமலையில் உள்ள மாத்ரு தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன், தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காம்பளக்சில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.

Related Stories: