திருச்சி பொன்மலை பணிமனையில் உருவான நீராவி ரயில் என்ஜின் லாரியில் ஊட்டிக்கு அனுப்பப்பட்டது

திருச்சி: திருச்சி பொன்மலையில் முதல்முறையாக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் என்ஜின் லாரியில் ஏற்றி ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலைகளின் ராணி ஊட்டி என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நீராவி ரயில் தான். அதன் பிறகு தான் ஊட்டியின் குளுகுளு பிரதேசங்கள் மனதில் தோன்றும். ஊட்டிக்கு செல்வோர் நீராவி ரயிலில் பயணிப்பதை அதிகம் விரும்புவர். அந்த வகையில் ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும் அவற்றை ஆன் செய்யும் போது ஏதாவது எண்ணெயில் தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் (பர்னஸ் ஆயில்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, அதிகளவில் புகை எழும்பும்.

இதனால் உலை ஆயிலுக்கு மாற்றாக அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை பணிமனையில் தயாராகி உள்ளது. இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்க கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், அதேபோல என்ஜினின் உள்பகுதியிலும் எல்இடி பல்புகளும் உள்ளது.

இந்த சிறப்பு ரயில் என்ஜின் ரூ.9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி துவங்கி 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர். ஊட்டி மலை ரயில்கள் இதுவரை நிலக்கரி மற்றும் லூப் ஆயிலில் மட்டும் இயங்கி வந்த நிலையில், முதல் முறையாக அதிவேக டீசல் என்ஜினில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர் இதில் காணப்படும் நிறைகுறைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த ரயில் என்ஜின்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதே பொன்மலை பணிமனையில் புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றைக்கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் என்ஜின் லாரி மூலம் நேற்று முன்தினம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் மல்லையா இந்த என்ஜினை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

Related Stories: