மனைவி, குழந்தைகள் சாவுக்கு காரணம் என கைது ஜாமீனில் வந்த விவசாயி குலதெய்வ கோயிலில் தற்கொலை

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அருகே மனைவி மற்றும் குழந்தைகள் தற்கொலைக்கு காரணம் என கைதான விவசாயி, ஜாமீனில் வௌியில் வந்து குலதெய்வ கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவரது மனைவி மரகதம் (30). செல்வகணபதி(7) கோகுலக்கண்ணன் (5) என 2 மகன்களும் இருந்தனர். விவசாயியான பிரபாகரன், தோட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை உருக்கி விற்பனை செய்யும் கம்பெனியும் நடத்தி வந்தார். இந்நிலையில், கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக, மரகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மரகதம், தோட்டத்தில் உள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் வீசி கொன்று விட்டு, காலில் கல்லை கட்டிக் கொண்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், பிளாஸ்டிக் கம்பெனிக்கு வேலைக்கு வந்த பெண்ணுடன் பிரபாகரனுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மனைவி, குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து பிரபாகரன் மற்றும் அவரது கள்ளக்காதலி சீதா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிரபாகரனை ஆத்தூர் சிறையிலும், சீதாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். இதனிடையே, ஜாமீனில் வந்த பிரபாகரன், மனைவி, குழந்தைகள் இல்லாததால் மனஉளைச்சலில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு ஓமலூர் அருகே தலையாரியூரில் உள்ள குலதெய்வமான அண்ணமார் கோயிலுக்குள் சென்று, பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து ஓமலூர் போலீசார் பிரபாகரன் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: