சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.
அதன் படி, நேற்றுடன் தென் மேற்கு பருவமழை முடிவடைந்து, இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வருவதால், அக்டோபர் 15ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 45% அதிக மழை பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.