ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா  புறக்கணித்துள்ளது. உக்ரைனின் 4 மாகாணங்களை வாக்கெடுப்பு மூலம் ரஷ்யா கைப்பற்றியதற்கு எதிராக தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது.

உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் அறிவித்தார்.    உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.    

இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.    

உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யாவால் கொண்டுவரப்பட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது மற்றும் உக்ரைனில் இருந்து ரஷ்யா உடனடியாக படைகளை வாபஸ் பெறுமாறு அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது.    

இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்க மறுக்க வேண்டும் என்று ரஷ்யா கோரியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினருக்கு கண்டனம் தெரிவிப்பது முன்னெப்போதும் இல்லாதது என்று ரஷ்ய பிரதிநிதி கூறினார். ஆகவே இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. இதற்கான வாக்கெடுப்பில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்களிப்பதில் இருந்து விலகியது.இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன.

Related Stories: