தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு: பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேதியும் வெளியானது

சென்னை: திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய, நகர, நகரிய, பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு கூட்டம் 9.10.2022ல் காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.

அப்போது திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். மேற்கண்ட பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் 7.10.22ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களைப் பொதுக்குழு உறுப்பினர்கள் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் உட்பட) ஐவர் முன்மொழிய, ஐவர் வழி மொழிய வேண்டும். அனைத்து நடைமுறைகளிலும் திமுக தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: