இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும். இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வடமாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருவார்கள்.

இம்மாத துவக்கத்தில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பின் பரவலாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது.

இதனால் இரண்டாவது சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்திருந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்பட்டது. அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தலங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.

இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டினார்கள். பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட களைகட்டியிருந்தன.சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.

Related Stories: