பாட்னா: பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையினால் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்திவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் லாலுவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த பின்னர் முதல்முறையாக அமித்ஷா பீகாரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறுனியா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா; சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக தொகுதிகளில் வென்ற போதும் பிரதமர் உறுதியளித்தது படி நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதாக குறிப்பிட்டார். ஆனால் பதவி மீது உள்ள மோகம் காரணமாக நிதிஷ் குமார் பாஜக மற்றும் பீகார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக அமித்ஷா சாடினார்.