ராணிப்பேட்டை அருகே பட்டப்பகலில் துணிகரம் தொழிலாளி வீட்டில் 31 சவரன் நகை, ₹5 லட்சம் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை அருகே வானாபாடி எடப்பாளையம் கிராமம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜாமணி(47), பெல் நிறுவனத்துக்கு இரும்பு லோடு ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டி ஓட்டும் கூலி தொழிலாளி. இந்நிலையில் ராஜாமணி நேற்று காலை தனது தாய் கோவிந்தம்மாளுடன் அறுவடை செய்த 10 நெல் மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்றார்.

 அங்கு நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு, தனது தாய் கோவிந்தம்மாளையும் அங்கேயே விட்டுவிட்டு பகல் 12 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.

அப்போது, வீட்டில் இருந்த அவரது சகோதரி சகுந்தலா, அவரது உறவினர் குப்பு ஆகியோர் வெளியில் சென்றிருந்தனர். ஆனால் வீட்டின் கதவு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 31 சவரன் தங்க நகைகளையும், சமீபத்தில் எடுத்து வைத்திருந்த சீட்டு பணம் ₹5 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் ராஜாமணி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 5 சவரன் தங்க நகை மட்டும் தப்பியது. மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: