உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது; லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

கீவ்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் லேசான காயம் அடைந்துள்ளார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கற் மீது மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் 2வது தலைநகரான கார்கிவ் நகரை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.

இதையடுத்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு ரஷ்ய படைகளை வென்று கார்கிவ் நகரை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளது. பின்னர் கார்கிவ் நகரில் ஏற்றப்பட்டிருந்த ரஷ்ய கொடியினை தீயிட்டு கொழுத்திய உக்ரைன் ராணுவம், உக்ரைன் கொடியை ஏற்றியது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுபற்றி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது பேஸ்புக் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆம்புலன்ஸில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories: