புதுடெல்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் டெல்லி போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இரட்டை சிலை சின்னத்தை பெற்று தருவதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். திகார் சிறையில் இவர் இருந்தபோது, தொழிலதிபர் மனைவி ஒருவரிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. அதில், தனக்கு கிடைத்த மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த கார் உள்ளிட்ட பரிசு பொருட்களை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும், சுகேஷை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்து வைத்த பிங்கி இராணி என்பவரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
