கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் இன்று காலை போலீசாரின் வாகன சோதனையில், ஆந்திர பேருந்தில் கோணி மூட்டைக்குள் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒரு வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த அரசு பேருந்தை மடக்கி, அதில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சந்தேக நிலையில் ஒரு வாலிபர் கோணி மூட்டையுடன் இறங்கி செல்ல முயற்சித்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கோணி மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அதில் தனித்தனி பார்சல்களாக 21 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம், தடா பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (22) என்பதும், இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் மொத்தமாக கஞ்சா விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த ராமமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: