சென்னை: பாத யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் முயற்சி வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது. 150 நாட்களில் ஒரு கோடி பேரை சந்திக்கும் ராகுல் காந்தி தலைமையில் இந்த பரப்புரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.