ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் அரசு பெண்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா -மாணவிகள் சாகசம் செய்து அசத்தல்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் அரசு பெண்கள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் மாணவிகள் பங்கேற்று சாகசங்கள் செய்து அசத்தினர்.

ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார். நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையாளர் பழனி, மத்திய ஒன்றிய செயலாளர் உமாகன்ரங்கம், நகர மன்ற துணை தலைவர் இந்திரா பெரியார்தாசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டு விழா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதனையடுத்து, பள்ளி மாணவிகளின் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. பிறகு மாணவிகளின் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில் மாணவிகள் பல்வேறு விளையாட்டில் கலந்து கொண்டு சாகசம் செய்தனர். இதில் சிலம்பம், பிரமிட் காட்சி, நடனம் உள்ளிட்டவைகளை செய்து பார்வையாளர்களை அசத்தினர். இதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடற் கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: