முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுக்கு டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தேர்வு..!!

சென்னை: விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுகள் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விளையாட்டுதுறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்க ரூ. 16. 30 லட்ச நிதியை அரசு விடுவித்தது. இதன்மூலம், 2018-2019, 2019- 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்ச்சியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடைப்பந்து விளையாட்டு வீரர் வி.பி. தனபால் குமார், சிறந்த விளையாட்டு அமைப்பாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுக்கு டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தடகள வீரர் மோகன் குமார், டேக்வான்டோ வீராங்கனை அனுஷியா பிரியதர்ஷினி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை செலினாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தடகள பயிற்சியாளர் கே.எஸ்.முகமது நிஜாமுதின், கால்பந்து பயிற்சியாளர் கோகிலாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேட்மிண்டன் பயிற்சியாளர் ராமசுப்பிரமணியன், வாலிபால் பயிற்சியாளர் ஆரோக்ய மெர்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

கபடி போட்டி நடுவர் சுந்தரராஜ் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடுவருக்கான விருது பெறுகிறார். டென்னிஸ் வீரர்கள் பிருத்வி சேகர், ஜீவன் நெடுஞ்செழியன், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை ஸ்ரீநிவேதாவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்குவாஷ் வீராங்கனை சுனைனா சாரா குருவில்லா துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் சத்குருதாஸுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா, கால்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் கன்னா, வாலிபால் பயிற்சியாளர் எம்.பி.முரளிக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: