மணிலா: எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் 98% கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே வாங்குவதால், ஈரான் -அமெரிக்கா இஸ்ரேல், இடையேயான போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகளவில் கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இதன் நேரடி விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிபொருள் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதுடன், அதன் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் விண்ணைத் தொட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலையைத் தொடர்ந்து, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. எரிபொருள் இருப்பை உடனடியாக அதிகரிக்க, பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை அரசு தனது கையில் எடுத்துள்ளது.
மேலும், எரிவாயு விலை உயர்வால் மின் கட்டணம் அதிகரிப்பதைத் தவிர்க்க, தற்காலிகமாக நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களையே அதிகம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பொதுப் போக்குவரத்தில் படகு சேவைகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஆசிய நாடுகளுக்குத் தேவையான 90 சதவீத எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருவதால், அந்தப் பாதையில் நிலவும் பதற்றம் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
