மெட்ரோ ரயில் பணிக்காக நம்ம சென்னை செல்பி மேடை மூடல்

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.சென்னையில் 2வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடை பெறுகிறது. 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 3வது வழித்தடம் மாதவரம்-சிறுசேரி சிப்காட் 45.8 கி.மீ., 4வது வழித்தடம் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ., 5வது வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதில் 4வது வழித்தடம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம், மற்றும் உயர்மட்ட வழித் தடப்பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரயில்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக கலங்கரை விளக்கம் முதல் நம்ம சென்னை செல்பி மேடை வரை இரும்பு தடுப்பு வேலிகள், பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நம்ம சென்னை செல்பி மேடை முழுவதுமாக மெட்ரோ ரயில் பணிக்காக மூடப்பட்டது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாதவாறு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த செல்பி மேடையில் செல்பி எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.  மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும் வரை நம்ம சென்னை செல்பி மேடை திறக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: