முத்துப்பேட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை-இடித்துவிட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் வேதாரண்யம்-முத்துப்பேட்டை சாலையில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பகுதியாக அமர்ந்து இருக்கும் வகையில் மேலப்பெருமழை பயணிகள் நிழற்குடை கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 10வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்குடை கட்டிடத்திற்கு வந்துதான் மேலப்பெருமழை மக்கள் மட்டுமின்றி இடும்பாவனத்தை கிராம மக்கள் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் முத்துப்பேட்டை-வேதாரண்யம், அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் பயனடைந்து வந்தது. இந்தநிலையில் தற்போது பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேல் சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் எலும்புகூடாக காட்சியளிக்கிறது.

கட்டிட சுவர்களும் சேதமாகி உருக்குலைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் தற்பொழுது மழை பெய்து வருவதால் நனைந்து நிற்கும் அவலமும் உள்ளது. அதேபோன்று நிழற்கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து சேறும் சகதியுமாக உள்ளது. அதனால் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த பழுதடைந்த இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் மீண்டும் புதியதாக பேருந்து நிழற்குடை கட்டிடம் உடன் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: