கொலை முயற்சி வழக்கில் கைது ஜாமினில் வந்த காங். தலைவருக்கு பாலாபிஷேகம்

போபால்: கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜாமினில் வெளியே வந்ததையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ராஜூ படோரியா என்பவர், பாஜக பிரமுகரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்ட வருக்கு ஜாமின் கிடைத்தது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ராஜு படோரியாவை டிரம்ஸ் அடித்து வரவேற்றனர். ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பின்னர் அவருக்கு பாலால் அபிஷேகம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் உள்ளூர் தலைவர் நீலாப் சுக்லா கூறுகையில், ‘ராஜூ படோரியா மீது பொய் வழக்கு பதியப்பட்டது. தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதால், அவரை சிறையில் இருந்து அழைத்து வந்து பாலாபிஷேகம் செய்தோம்’ என்றார்.

Related Stories: