மதுரை: மவுன யுத்தத்தில் இருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இந்தியாவிலேயே 3வது மாபெரும் இயக்கமாக இமயமென உயர்த்திய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான வெற்றி வரலாறு இன்று சுயநலத்தால் ஏற்பட்டிருக்கின்ற விவாதங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இன்று அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை இழந்து, தனது அரசியல் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பன்னீர்செல்வம் ஆதரவின்றி நிற்கிறார்.
அதனை ஈடுகட்ட, தனக்கு செல்வாக்கு உள்ளதை போல காட்டிக்கொள்ள இதுவரை மவுன யுத்தத்தை நடத்தியவர்கள், தற்போது விலைபேசும் யுத்தத்தை தொடங்கியிருப்பதாக தொண்டர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற தொண்டர்களை தவறாக எடைபோட்டு விடாதீர்கள். செல்வாக்கை உயர்திக்கொள்ளவும், செல்வாக்கு இருப்பது போன்று காட்டிக்கொள்ள வும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு பின்னடைவை தந்துக் கொண்டிருக்கிறது என்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் விஸ்வாசத்தை பதவி, பணம் என்று விலைபேசி, உண்மையான தொண்டர்களை வேதனை அடைய செய்துள்ளனர் எனவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.