கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஜூலை 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தொடர்ந்து ஜூலை 17ம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதிகேட்டு பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளியின் உள்ளே நுழைந்த கலவரக்காரர்கள் பள்ளியின் பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு ஏற்பாட்டின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் 8 வகுப்புக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் 12-ஆம் வகுப்புக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். பின்னர் வாதிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் தடயம் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியைச் சீரமைக்கும் பணியைத் தொடங்க அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்தார். முதலில் பள்ளி சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்த ஜின்னா, சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முடியும் எனக் கூறினார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த மனு குறித்து மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Related Stories: