‘என்னை தாக்க சதி செய்தார்’; கண்ணூர் பல்கலை துணைவேந்தர் கிரிமினல்.! கேரள கவர்னர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் ராகேஷின் மனைவி பிரியா வர்கீசை, கண்ணூர் பல்கலைக்கழக இணை பேராசிரியராக நியமிப்பதற்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக கவர்னரின் அதிகாரத்தை குறைக்க சட்டசபையில் மசோதாவை கொண்டுவர கேரள அரசு தீர்மானித்தது தான் கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பிரியா வர்கீசின் நியமனத்தை நிறுத்தி வைத்ததற்கு கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன், கவர்னருக்கு எதிராக வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார். இது கவர்னர் ஆரிப் முகமமது கானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 2019ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த சரித்திர மாநாட்டில் என்னை தாக்குவதற்கு துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் தலைமையில் சதி நடந்தது என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் ஒரு கிரிமினல் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர் போல செயல்படுகிறார் என்றும் கவர்னர் கூறினார். தன்னை தாக்க சதி நடந்ததாக கவர்னர் கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

Related Stories: