அம்பத்தூர் அருகே தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி

சென்னை: அம்பத்தூர் அருகே தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து பகுதி நேர வேலைக்கு சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் அருகே இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் முருகன். இவர், சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது இருந்ததால் அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சரவணகுமார் (31), சஞ்சய் குமார் (36) என்ற இரண்டு தொழிலாளர்களை தனது தொழிற்சாலையில் பகுதிநேர வேலை செய்ய அழைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணிக்கு வந்த அந்த இரண்டு தொழிலாளர்களும் இரவு நேர பணியில் ஈடுபட்டுள்ளனர். சரவணகுமாரின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால், சரவணகுமார் செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நேற்று காலை வந்து பார்த்தார். அங்கு சரவணகுமாரும், சஞ்சய் குமாரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சரவணகுமார், சஞ்சய் குமார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், பாதுகாப்பு வசதி இல்லாததால் இருவரும் மின்சாரம் பாய்ந்து பலியானார்களா என்ற கோணத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சஞ்சய் குமார் வடமாநிலத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. பகுதி நேர வேலைக்கு சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: