தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில் அமெரிக்க கிரீன் கார்டுக்கு கோத்தபய விண்ணப்பம்

கொழும்பு: தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ள கோத்தபய ராஜபக்சே, அமெரிக்காவில் குடியேற வசதியாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதனால் அவர் கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி பாங்காக்கில் தங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்க கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சேவின் மனைவி லோமா ராஜபக்சே அமெரிக்காவில் இருப்பதால், அவர் அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞர்கள் மூலம் கிரீன் கார்டு பெறுவதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளார். ஏற்கனவே அவர் 1998ல் அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின் 2005ல் இலங்கை திரும்பினார். கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.

தற்போது சிக்கலில் சிக்கியுள்ளதால் மீண்டும் அமெரிக்காவில் குடியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வரும் நவம்பர் மாதம் வரை தாய்லாந்தில் இருப்பதற்கான தனது திட்டத்தை ரத்து செய்து, வரும் 25ம் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: