நெல்லை: தமிழ் அறிஞரும், பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமானார்.
பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தவர் நெல்லை கண்ணன் (77). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நகைச்சுவையாகவும், நெல்லை தமிழில் அற்புதமாகவும் பேசக் கூடியவர். தமிழ்க்கடல் என்றும், நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் நெல்லை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டார். இவருக்கு தமிழக அரசின் 2021ம் ஆண்டின் இளங்கோவடிகள் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. சமீப காலமாக வயது முதிர்வால் நெல்லை டவுனில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அவரது இல்லத்தில் நெல்லை கண்ணன் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.