கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்..ஜிபிஎஸ் கருவிகளை பறித்து சென்றனர்..!!

ராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படை, ஜி.பி.எஸ். கருவிகளை பறித்து சென்றது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டி அடித்தனர்.

மேலும் வலைகளை சேதப்படுத்தி மீனவர்கள் வைத்திருந்த 4 ஜி.பி.எஸ். கருவிகளை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் பாதியிலேயே ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது இவ்வாறு தாக்குதலில் ஈடுபடுவது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: