குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்பு வகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்த வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வீட்டு வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ‘அன்றாட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.

ஆனால், இக்குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. அதேநேரம் வர்த்தக பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால் ஜிஎஸ்டி கிடையாது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: