புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்து தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 31ல் பிரதாம்மாள் கோயில் தேர் கவிழ்ந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 31ல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.தேரோட்டம் தொடங்கி இரண்டு அடி இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். தேருக்கு அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலையே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அடித்தளத்தில் உள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டம் நடத்தியதால் தான் விபத்து ஏற்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது மட்டுமல்லாமல் இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தேர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் செயல் அலுவலரை இடைநீக்கம் செய்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.