சோழவந்தான் அருகே வைகையில் மூழ்கி வாலிபர் பலி-எல்லை பாதுகாப்பு படை வீரர் மாயம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே வைகையாற்றில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யங்காளை மகன் அன்பரசன் (25). பிஎஸ்சி. பட்டப்படிப்பு முடித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதே ஊரை சேர்ந்தவர் நாகத்தேவர் மகன் வினோத்குமார் (25). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணி புரிந்து வந்தார். இவர்கள் இருவர் உள்பட நண்பர்கள் 6 பேர் சோழவந்தான் அருகே திருவேடகம் - மேலக்கால் இடையே உள்ள வைகையாற்று தடுப்பணையில் நேற்று மதியம் குளிக்க வந்தனர்.

முதலில் இறங்கிய அன்பரசன், வினோத்குமார் இருவரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த உடனிருந்த நண்பர்கள் காடுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார், தீயணைப்பு அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வைகையாற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்பரசன் உடல் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான வினோத்குமாரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருமணமான எல்லை பாதுகாப்பு படை வீரர் வினோத்குமார், நேற்று காலை தான் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை மேலக்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத வேறொரு ஆண் சடலம் மீட்கப்பட்டு, சோழவந்தான் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் உள்ளது.

Related Stories: