புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை, அதற்கு பதிலாக 5 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து துணை நிலை ஆளுநர் உரையாற்றினார். அப்போது ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதமே ஒன்றிய அரசின் புதுச்சேரி அரசுக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது தெரிந்தும் பட்ஜெட் போடவில்லை.
புதுச்சேரி மாநிலத்துக்கான நிதி எவ்வளவு என்பது தெரிந்தவுடன் துணை நிலை ஆளுநர் தலைமையிலான மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி பட்ஜெட் தொகையை இறுதி செய்து பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கலாம். இடைக்கால பட்ஜெட் என்பது 2 அல்லது 3 மாதங்களுக்கு மட்டும் தான் போட்டிருக்கலாம். ஆனால் 5 மாத காலத்துக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதி கேட்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கடந்த ஜூலை 6ம் தேதி தான் தமிழிசை தலைமையில் தான் மாநில திட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி ஒன்றிய அரசிடம் தெரிவித்து நிதியை பெற துணைநிலை ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் கடந்த ஒரு மாத காலமாக எடுக்கவில்லை.