தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்று வருகின்றது. 9வது நாள் திருவிழாவையொட்டி நேற்று பனிமய மாத அன்னை சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் பேராலய வளாகத்தை சுற்றி வந்தது. இந்த விழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 11ம் நாள் திருவிழாவான இன்று காலை திருவிழா திருப்பலி, தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.