3 மாதத்தில் 353 சோதனைகள்; 3 ஆண்டில் 8 விமானங்கள் விபத்து: அமைச்சர் வி.கே.சிங் தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டில் 8 விமான விபத்துகள் நடந்ததாகவும், கடந்த 3 மாதத்தில் 353 சோதனைகள் நடத்தப்பட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ‘கடந்த 2019ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி வரையிலான 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள் நடந்துள்ளன. 2019ம் ஆண்டில் ஒரே ஒரு விமான விபத்து ஏற்பட்டது.

2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என 2 விமான நிறுவனங்களின் விமானங்கள் விபத்தில் சிக்கின. 2021ம் ஆண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களின் தலா ஒரு விமானம் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. நடப்பாண்டில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு விமான விபத்து சம்பவம் நடந்தது.

2022ம் ஆண்டின் மே 2ல் இருந்து ஜூலை 13 வரையிலான காலகட்டத்தில் திடீர் சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரித்து உள்ளன. மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகளால் 353 திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில், பயிற்சி விமானிகள் குறைந்த உயரத்தில் பறந்து செல்வதனால் விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: