பழநி: பழநியில் பைபாஸ் சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி நகரில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. தவிர பழநி நகரின் சுற்றுப்புற கிராமங்களில் கோழி பண்ணைகளும் அதிகளவில் உள்ளன. இந்த இறைச்சி கடைகள், கோழி பண்ணைகளில் மீதியாகும் இறைச்சி கழிவுகள், இறகுகள் போன்றவற்றை மூட்டைகளாக கட்டி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலையில் ஆங்காங்கே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் அதிகளவு நடமாடும் இடும்பன் கோயில் பகுதியில் இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதால் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.