கவர்னர் தமிழிசை பெயரில் அமைச்சருக்கு போலி குறுந்தகவல்: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் தமிழிசை பெயரில் அமைச்சருக்கு போலி குறுந்தகவல்  அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற  நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்.  இவரது செல்போன் நம்பருக்கு நேற்று வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்துள்ளது. அதை அமைச்சர்  ஓப்பன் செய்து படித்துள்ளார். அப்போது நான் உங்ககிட்ட பேசனும்.. உடனடியாக  எனது லைனில் வாங்க... என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் எந்த புகைப்படமும் இன்றி தமிழிசை என்ற பெயர் மட்டும் இருந்தது.

அவர் ஏற்கனவே புதுச்சேரி கவர்னர் தமிழிசை  நம்பரை பதிவு செய்துள்ள நிலையில், இது புதிய நம்பராக  இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு உடனே கவர்னரின் தனிசெயலருக்கு தகவல்  கொடுத்தார். கவர்னரின் பெயரை யாரோ மர்ம நபர் தவறாக பயன்படுத்தி வருவதாக  அமைச்சர் முறையிடவே, உடனே இதுபற்றி புதுச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால்  கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் சைபர் கிரைம்  எஸ்பி சந்தோஷ் குமார் மீனா, மர்மநபர் மீது  வழக்குபதிந்து விசாரித்தனர். இதில் அது உத்தரபிரதேச  நம்பர்  என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன.   இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: