சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி: மேயர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் மேயர் பங்கேற்றார். கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட , வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இத் திருக்குளம் காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது வார்டில் அமைந்துள்ளது.இக்குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின் போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம். கடந்த திமுக ஆட்சியின் போது அண்ணா நூற்றாண்டு விழாவினையொட்டி இக்குளம் சீரமைக்கப்பட்டு நடைபாதை , அமரும் இருக்கை உள்ளிட்ட பணிகள் ரூ.43.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் இத்துறை குளத்தில் நீத்தார் ஈம சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம். மேலும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் இதில் மிதந்துள்ளதால் பக்தர்கள் நீராட செல்வதில்லை.

இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நேற்று முன்தினம் தன்னார்வர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார். ஆணையர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணை மேயர் குமரகுருநாதன் மாநகராட்சி உறுப்பினர்கள் சசிகலா கணேஷ், அஸ்மா பேகம், நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: