முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்!: ஆடிக்‍கிருத்திகை நன்னாளில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!!

டெல்லி: ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்‍களுக்‍கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆடி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்த நிலையில், ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை என்பது தமிழ் கடவுள் முருக பெருமாளுக்கு உகந்த தினங்களில் ஒன்றாகும். இந்த தினத்தில் விரதம் இருந்து முருகனை வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனையொட்டி முருகப்பெருமான் ஆலயங்களில் பக்‍தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என வகை வகையான காவடிகளை எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆடி கிருத்திகை வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் , ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்றும் நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: