ஆவடி: காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 15 வயது மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி பள்ளிக்கு சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அந்த மாணவி திருமுல்லைவாயல், வஉசி நகரை சேர்ந்த பிரவீன் (19) என்ற ஐடிஐ மாணவரை காதலித்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி வீட்டைவிட்டு பிரவீனுடன் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே அம்பத்தூர், ஸ்டெட்போர்டு மருத்துவமனை அருகே பள்ளி மாணவியை விட்டுவிட்டு பிரவீன் தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து தனது பெற்றோருக்கு அப்பள்ளி மாணவி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து சென்று பள்ளி மாணவியை மீட்டு, திருமுல்லைவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பள்ளி மாணவியிடம் பிரவீன் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து பிரவீனை போலீசார் வலைவீசி தேடினர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த பிரவீனை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து, போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீனை கைதுசெய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.