ஒன்றிய அரசின் உத்தரவால் 10 மடங்கு லாபம் பார்க்கும் அதானி நிலக்கரி நிறுவனம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நிலக்கரியை இறக்குமதி செய்ய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதால், அதானி நிறுவனம் 10 மடங்கு லாபம் சம்பாதிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இந்தியாவில் சமீபத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி குறைந்ததால், வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு நிலைமை சரி செய்யப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: ஒன்றிய அரசு முதலில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவதை கட்டாயமாக்கியது. அதன் பின்னர் இந்த நிலக்கரியை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியது. இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர்.

நண்பர்கள் பயன்பெறும் வகையிலான இந்த மாடலை மோடி அரசு அற்புதமாக ஏற்பாடு செய்துள்ளது. ஒரு டன் ரூ.16,700 என்ற விலையில் 25 லட்சம் டன் ரூ.4,035 கோடி மதிப்புள்ள நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவு நிலக்கரி மூலம் மின்உற்பத்தி செய்வோர் ரூ.20,000 என்ற விலையில் இறக்குமதி நிலக்கரியை வாங்க வேண்டும். இது வழக்கமாக டன் ரூ.1700 முதல் ரூ.2000 என்ற விலையில் வாங்கும் உள்நாடு நிலக்கரியை விட 7 முதல் 10 மடங்கு விலை அதிகமாகும். இதன் காரணமாக மின் கட்டணம் அதிகரிக்கும். நண்பர்கள் நன்மை கொள்கையை நிறுவனமயமாக்குவதற்கான மோடி அரசின் மூன்று முனை உத்தியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: