வேலூர்: ராணிப்பேட்டை மையத்தில் மகள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 50 வயதான அவரது தந்தை வேலூர் மையத்தில் ஆர்வத்துடன் நீட் தேர்வு எழுதினார். வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள டிகேஎம் மகளிர் கல்லூரியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீர் தேர்வு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை நிறுத்தி, ‘பெற்றோர் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்றனர். அதற்கு அவர், ‘நானும் நீட் தேர்வு எழுத போகிறேன்’ என்றார். இதையடுத்து, அவரின் அனுமதி சீட்டை சோதனை செய்து, தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தயாளன்(50). பார்மஸ்சிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகள் ராணிப்பேட்டை டிஏவி பெல் மையத்தில் நீட் தேர்வு எழுதுகிறார். நீட் தேர்வு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் நானும் எழுத வந்துள்ளேன்’ என்றார்.