12ம் வகுப்பு மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: பள்ளி நிர்வாகிகளை கைது செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவியின் சாவிற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியை உடனடியாக மூட வேண்டும். மாணவி ஸ்ரீமதி போலவே ஏற்கனவே 5 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவியின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்திரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: