சென்னை : எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக தரப்பில் ஒரு தபால் தரப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி தலைவரிடம் இருந்து எந்தவிதமான தபாலும் கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவரிடம் இருந்து மட்டுமே நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்துள்ளது. அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது. சட்டப்படி, விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் எப்படி சட்டமன்றம் நடந்ததோ அதேபோல எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் ஜனநாயக முறையில் நடக்கும். கடிதத்தின் மீது இதுவரையில் எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.