அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததே செல்லாது; ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள்: சசிகலா பேட்டி

புதுக்கோட்டை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்ததே செல்லாது என சசிகலா தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை. அவர்களை நான் நீக்குகிறேன் என ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா; இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றினையும் நேரம் வந்துவிட்டது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்துவிடக் கூடாது; ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு நிஜத்தை நிச்சயம் அடைவோம். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது; தலைமை பதவியை அடித்து பறிக்க நினைத்தால் அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. என்னுடைய வழக்கு நிலுவையில் இருக்கும் போது தற்போது கூட்டிய பொதுக்குழுவே தவறானது. பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை பொருளாளரே அறிவிக்க முடியும்; அப்படி இருக்கையில் இது எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும்?

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் தான். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானது கேள்விக்குறியாக உள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள் என்று கூறினார்.

Related Stories: