உத்திரமேரூர் பேரூராட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்:  ஏழை, எளிய மக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த உத்திரமேரூர் பேரூராட்சியில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில், மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் பட்டஞ்சேரி, நீரடி, மணித்தோட்டம், நல்லூர், ஓங்கூர், குப்பையநல்லூர், கல்லமாநகர், மல்லிகாபுரம், மல்லியங்கரணை, பருத்திக்கொள்ளை, ஆணைப்பள்ளம், காக்கநல்லூர், வேடபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களது திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் சுயஉதவி குழு கூட்டங்கள், கிராம சபை கூட்டம் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டியுள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் குறைந்த பட்ச வாடகையாக 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை எளிய மக்கள் தங்களது சுபநிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வுகளை தனியார் திருமண மண்டபங்களில் நடத்திட அதிக செலவீனம் ஏற்படுவதால் கடும் சுமைக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனைப்போக்கும் வகையில் உத்திரமேரூர் பேரூராட்சியில் புதியதாக சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: